குஜராத்தில் மக்களவை தேர்தல் நிலவரம் என்ன? - பிரத்யேக தகவல்களுடன் களத்தில் நியூஸ்7 தமிழ்!
மக்களவைத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு மே. 7-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், குஜராத் காந்தி நகர் தொகுதியில் இருந்து முதன் முறையாக தேர்தல் செய்திகளை வழங்கி வருகிறது நியூஸ்7 தமிழ். நமது செய்தியாளர் சேகரித்த பிரத்யேக தகவல்களை காணலாம்....
தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் பெரிய மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இங்குள்ள 26 தொகுதிகளுக்கும் வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது. காங்கிரஸ் 24 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான ஆம்ஆத்மி 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
பாஜக மிக வலிமையாக உள்ள மாநிலங்களில் குஜராத்துக்கே முதலிடம் என கூறலாம். இங்கு 1989-ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற 9 மக்களவை தேர்தல்களிலும் பாஜகவே அதிக இடங்களை பிடித்துள்ளது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் வென்றன. 2014, 2019-ம் ஆண்டுகளில் அனைத்து 26 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றது. சட்டப்பேரவையை பொருத்தவரை 1998-ம் ஆண்டிலிருந்தே பாஜக ஆட்சி குஜராத்தில் நடைபெற்று வருகிறது.
பாஜக சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா, காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இது வாஜ்பாய், அத்வானி ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதி ஆகும். சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் மனு ஏற்கப்படாததாலும் பிற வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதாலும் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் மக்களின் மனநிலை என்ன? அவர்களின் ஆதரவு யாருக்கு போன்ற விவரங்களை அறிந்துகொள்ள நமது நியூஸ்7 தமிழ் செய்தியாளர் வசந்தி கள ஆய்வு செய்துள்ளார்.
செய்தியாளர் வசந்தி சேகரித்த முழுமையான தகவல்களை நியூஸ்7 தமிழ் பிரைம் யூ டியூப் காணொலியை காண...