For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இங்கே எது நார்மல்..? - Sitaare Zameen Par - திரை விமர்சனம்!

சிறப்பு குழந்தைகளின் எதார்த்த வாழ்வியலை பேசி திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படத்தின் விமர்சனம் குறித்து விரிவாக பார்க்கலாம்
04:59 PM Jun 26, 2025 IST | Web Editor
சிறப்பு குழந்தைகளின் எதார்த்த வாழ்வியலை பேசி திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படத்தின் விமர்சனம் குறித்து விரிவாக பார்க்கலாம்
இங்கே எது நார்மல்      sitaare zameen par   திரை விமர்சனம்
Advertisement

"நான் மாறிட்டேன்..என்கிட்ட இருக்கிற தவறுகளை மாத்திக்கிறேன்.. சரியான விஷயங்களை ஏத்துக்கிறேன்.." என ஜெனிலியாவிடம் மனமுறுகி பேசுவார் அமீர் கான். மனிதர்களிடையே இத்தகைய மனமாற்றத்தை நிகழ்த்தும் விதமாக பேசுகிற படம்தான் சித்தாரே ஜமீன் பர்..

Advertisement

திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ்:

படத்தின் நாயகனான குல்ஷன் (அமீர்கான்) டெல்லி கூடைப்பந்து கிளப்பின் உதவி தலைமைப் பயிற்சியாளராக வருகிறார். சிறு வயது முதலே தனது உருவம் குறித்த கிண்டல்களை எதிர் கொண்டு வரும் குல்ஷனை தனக்கு மேல் உள்ள பயிற்சியாளர் அரோரா உருவ கேலி செய்யவே அவரது முகத்தில் ஓங்கி குத்து விடுகிறார். இதன் பிறகும் ஆத்திரம் தீராத அவர் மது அருந்தி விட்டு மோசமாக வாகனம் ஓட்டி காவல் துறையின் காரை இடித்து தள்ள நீதிமன்றம் அவருக்கு 2 தண்டனைகளை தேர்வாக முன் வைக்கிறது. ஒன்று சிறை மற்றொன்று சமூக சேவை, அதாவது Intellectual Disabilities எனும் சிறப்பு குழந்தைகளுக்கான பாஸ்கட் பால் பயிற்சி அளிப்பது. அமீர்கானுக்கு வேறு வழியே இல்லை.. சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து அவர்களது அணியை வெல்ல வைத்தாரா? அல்லது அவர்களை கையாளத் தெரியாமல் சிறை தண்டனை அனுபவித்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகர்கள்:

படத்தில் நடிகர்கள் தேர்வு மிகவும் அருமை. சுனிதாவாக வரும் ஜெனிலியா, காப்பகத்தை நடத்தும் குர்பால் சிங், Intellectual Disabilities குழந்தைகளாக வருகிற ஒவ்வொருவரும் சிறப்பான தேர்வு. லேட் எண்ட்ரி கொடுத்தாலும் மனதில் நிலைத்து நிற்கிற கோலு கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தி போகிறது. தாரே ஜமீன் பர் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி என பேசப்பட்டாலும் இது வேறொரு கதைக்களம் தான். ஆனால் இரண்டு திரைப்படங்களும் பேசும் கரு ஒன்றுதான். சிறப்பு குழந்தைகளும் சாதாரணமானவர்கள் என்பதைத்தான் வலியுறுத்துகின்றன. ஸ்பானிஷ் மொழியில் வெளியான சாம்பியன்ஸ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான டப்பிங் தான் சித்தாரே ஜமீன் பர்.

படத்திற்கு வலு சேர்த்த காமெடி :

பொதுவாக இது போன்ற கருப்பொருள் கொண்ட திரைப்படங்கள் கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் நிறைய சோகமான காட்சிகளை வைப்பதுண்டு. அதிலிருந்து மாறுபட்டு சிறப்பு குழந்தைகளிடத்திலும் நகைச்சுவை இருக்கிறது அதனை கமர்ஷியலாகவும் சக்சஸ் பண்ண முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் பிரசன்னா. தியேட்டருக்கு வரும் நபர்களுக்கு ஒரு காமெடி விருந்து நிச்சயம் உண்டு, காமெடி நிறைய வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

எது நார்மல்...?

சிறப்பு குழந்தைகளை பற்றி பேசுபவர்கள், அவர்களை அசௌகரியமாக பார்க்கும் பொது புத்தி போன்றவை அவர்கள் மீது நார்மலான குழந்தைகள் அல்ல என்கிற வாதத்தைத்தான் முன்வைப்பதுண்டு. எது நார்மல்..? என்று மிக அழகாக குல்பிர் சிங் கதாபாத்திரத்தின் மூலம் அழுத்தமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் இயக்குநர். சிலர் உயரம், சிலர் குள்ளம், சிலர் மூக்கு பெரியது, சிலருக்கு சிறியது, சிலருக்கு கோபம வரும், சிலருக்கு அழுகை வரும் அவரவர்களுக்கு தங்களுடைய சுபாவம் நார்மல் எனில் சிறப்பு குழந்தைகளுக்கு அவர்களுடைய சுபாவம் நார்மல் தான் என்று குல்பீர் சிங் பேசும் வசனங்கள் நச்...

ஜெனிலியா - அமீர்கான் கெமிஸ்ட்ரி:

தமிழ் ரசிகர்களிடம் சச்சின் திரைப்படத்தில் ஷாலினியாகவும், சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தின் மூலம் ஹாசினியாகவும் அறிமுகமான ஜெனிலியா "ஹ.ஹா... ஹாசினி.." என்ற குறும்புத்தனங்களோடு அல்லாமல் ஒரு எதார்த்த பெண்ணாக கொஞ்சம் கூடுதல் அழகோடு திரையில் ஜொலிக்கிறார் . தனக்கு வழங்கப்பட்ட காட்சிகளில் இத்தனை வருட இடைவெளியை சரியாக இட்டு நிரப்பியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அமீர் கான் - ஜெனிலியா கெமிஸ்ட்ரி ஃபீல் குட் என்றே சொல்லலாம்.

சிறப்பு குழந்தைகள் : Intellectuals

சிறப்பு குழந்தைகளாக வருகிற ஒவ்வொருக்குள்ளும் ஒரு வாழ்வியல் இருக்கிறது. அவர்களும் உழைக்கச் செல்கிறார்கள், உழைக்க முடியும் என்கிற தகவலை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். படம் முழுக்க ஹெல்மட்டுடன் வருகிற சுனிலின் குறும்புத்தனம், கரீம் குரேஷியின் உழைப்பு, லோட்டஸின் ஹேர் டை, தண்ணீரை பார்த்தாலே இறந்து விடுவேன் எனப் பயந்த குட்டுவின் ஆனந்த குளியல், கோலுவின் Boldness, ஹர்கோவிந்தின் மௌனம் மற்றும் ஷர்மா ஜீயின் புரியாத மொழி என நமக்கும் எல்லாமே நார்மலாகிவிடும்.

மனதை தொடும் வசனங்கள் :

  •  விதி என்பது கைரேகைகளில் எழுதப்படுவதில்லை. நம் குரோமோசோம்களில் எழுதப்படுகிறது
  •  எது நார்மல்? யார் நார்மல்? என்பதெல்லாம் அவரவரின் அகநிலைப் பொறுத்ததே
  •  அவங்களுக்கு நான் எதையும் சொல்லிக் கொடுக்கல, அவங்ககிட்ட இருந்துதான் நான் கத்துக்கிட்டேன்
  •  நம்ம டீம் ஜெயிக்கனும் சொல்லுங்க.. ஆனால் அடுத்த டீம தப்பா பேசாதீங்க.. அது தப்பு


க்ளைமாக்ஸில் ட்விஸ்டு:

திரைப்படத்தின் கதைக் கருவிற்கு ஏற்றவாறு சிறப்பு குழந்தைகள் பற்றி கதைக்களம் அமைந்தாலும் அமீர்கான் அம்மாவின் வாழ்க்கை, பாஸ்கட் பால் இறுதிப் போட்டி என கமர்ஷியல் குறியீடுகளுக்கான சில ட்விஸ்ட்கள் இடம்பெற்றுள்ளன. அவை திரையில் கைதட்டல்களை பெற்றுத் தருவதோடு எது இயல்பு, சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்ததனால் அதுதான் சரியா..? வாழ்க்கை, விளையாட்டு, போட்டி, சமூகம் என இப்படித்தான் இருக்க வேண்டுமென உங்களுக்கு யார் கற்றுத் தந்தது?. என்கிற கேள்விகளை ஆழமாக எழுப்புகிறது. படம் முடிந்து வெளியே வரும் போது நாயகன் அமீர் கானை போலவே ஏற்றுக்கொள்ள முயன்றும் , முடியாமலும் கொஞ்சம் மாற்றத்திற்கு தயாராகும் மனநிலையோடு, மன நிறைவோடு வெளியே வருவோம்.

  •  ச.அகமது, நியூஸ் 7 தமிழ்
Tags :
Advertisement