வெளுத்து வாங்கிய கனமழை... வீடு இடிந்து இளைஞர் உயிரிழப்பு!
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆரூட்டுப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (எ) குட்டன் (26). இவர் தேயிலை தொழிற்சாலையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். வழக்கமாக மதியம் பணிக்கு செல்லும் வினோத் இன்று பணிக்கு செல்லவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றனர்.
இதையும் படியுங்கள் : 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி
ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினரும், தொழிற்சாலை ஊழியர்களும் வினோத்தின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்போது தொடர் கனமழை காரணமாக அவரது வீடு இடிந்து கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் வினோத்தை தேடினர்.
வீடு இடிந்ததில் அவர் மண்ணுக்குள் புதைந்து கிடந்ததை கண்டனர். வினோத்தை மீட்டு சோதித்து பார்த்ததில் அவர் ஏற்கேனவே உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் அவரின் உடல் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. வீடு இடிந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது.