"ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"ஓரணியில் தமிழ்நாடு - திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி. ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள். சாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.
#ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி!
கழகத் தலைவரும் - மாண்புமிகு முதலமைச்சருமான திரு @mkstalin அவர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் - தொகுதிப்… pic.twitter.com/xJ3jjzSBly
— DMK (@arivalayam) June 28, 2025
கீழடி உண்மைகள் புதைக்கப்படுகிறது, இந்தியைத் திணிக்கிறார்கள், கல்வி நிதி மறுக்கப்படுகிறது, நீட் மூலம் மாணவர்கள் பலி வாங்கப்படுகிறார்கள்,தொகுதி மறுவரையறை மூலமாக நாடாளுமன்றத்தில் நம் வலிமையைக் குறைக்க சதி நடக்கிறது. பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என எல்லா வகையிலும் நம் மீது வன்மத்துடன் செயல்படுகிறார்கள்.
ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன். நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம். இதுதான் தமிழர்களின் தனிக்குணம், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான். இந்தச் செய்தியைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திடமும் சேர்ப்போம். அதற்காக ஜுலை 1 தொடங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.