“முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஆனால்...” - கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வை பகிர்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று(ஜூன்.10) நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 147 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பை நிறைவு செய்ததற்கான சான்றிதழை வழங்கினர்.
அதன் பின்ன அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “ ஆரம்ப சுகாதார நிலையங்களை பொறுத்தவரை 2026ல் உருவாகக்கூடிய காலிப்பணியிடங்களை மனதில் வைத்து தான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் 2642 பணியிடங்கள் நிரப்பப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் 1250ல் இருந்து 1300 காலிப்பணியிடங்கள் உருவாகிறது. இதில்
முதுநிலை கல்வி முடித்தவர்கள் டிஎம்எஸ் டிஎம்எப்க்கும் மாற்றி அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு அனுப்பப்பட்ட பிறகு அந்த இடங்களும் காலியாக உருவாகிறது. எவ்வளவு பணிகள் காலியாக இருக்கிறதோ அதனை கணக்கில் கொண்டு மருத்துவ தேர்வாளர்கள் பணியாணயத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களை பொருத்தவரை போதுமான மருத்துவர்கள் இருக்கின்றனர். அதேபோல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு தலைமை மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய சிறப்பு மருத்துவர்கள் காலி பணியிடங்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து முதுநிலை படித்து முடித்தவர்களை அந்தப் பணிக்கு மாற்றம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
காலி பணியிடங்கள் இல்லாத நிலை என்பது கடந்த ஆறு மாத காலமாக நிலவி வருகிறது. 2642 பணியிடங்களுக்கு பணியானை கொடுத்தும் மூன்று மாத காலமாக அந்த பணியில் சேராமல் இருந்த 27 பேருக்கு சோக்காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 248 நபர்களுக்கு வருகின்ற ஜூலை மாதத்துடன் பணியில் சேர்வதற்கான காலம் முடிவடைகிறது. அவர்களும் சேரவில்லை என்றால் அவர்கள் பணி ஆணையம் ரத்து செய்துவிட்டு ஏற்கனவே தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற அதே வகுப்பைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்து அந்த பணி வழங்கப்படும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் எம்.ஆர்.பி., டி.என்.பி.எஸ்.சி, என்.எச்.எம். போன்ற அமைப்புகள் சார்பில் 29,771 மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை
பொருத்தவரை 43155 பேருக்கு வெளிப்படை தன்மையோடு கலந்தாய்வு நடத்தி அவர்கள் விரும்புகின்ற இடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது
உலகம் முழுவதும் கொரோனா இருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பெரிய பதட்டத்தை உருவாக்க கூடாது. கொரோனாவை பொருத்தவரை 2019 இறுதியில் இருந்து ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா, காமா பிளஸ் ஓமிக்ரான் போன்ற தொடர் உருமாற்றங்களை பெற்று வந்தது. தற்போது வந்துள்ள கொரோனா பாதிப்பை பொறுத்தவரை 19 மாதிரிகள் பூனாவில் இருக்கக்கூடிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் தற்போது பரவும் கொரோனா ஒமேக்ரானில் ஒரு வகை .
இந்த வைரஸ் வீரியமற்ற வைரஸ். இந்த வைரஸ் பாதிப்புக் உள்ளானவர்களுக்கு மூன்று நாட்களில் இருந்து தொண்டை வலி சளி காய்ச்சல் உள்ளிட்ட
தொந்தரவுகள் இருக்கும். பொதுமக்களுக்கு ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் சுகாதார துறை அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற தீராத காய்ச்சல் நீண்ட நாள் தொண்டை வலி சளி சரியாகாமல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்.
பொதுமக்களுக்கு பொதுவான அறிவுறுத்தலோ விதியோ சட்டமோ கட்டாயமா எதுவும் இல்லை. அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் வயது முதிர்ந்தவர்கள் பொது இடத்திற்கு செல்லும் பொழுது முகக் கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை. ஆனால், அது நல்லது.
இந்திய அளவிலும் சரி தமிழ்நாடு அளவிலும் சரி கொரோனாவால் தற்பொழுது எந்த உயிரிழப்பும் இல்லை. கேரளாவில் நம்மை விட நாள் ஒன்றுக்கு பத்து மடங்கு அதிகமாக கொரோனா பரவி வருகிறது. அங்கும் கொரோனா உயிரிழப்பு இல்லை.ஏற்கனவே ஏற்பட்ட ஒரு இரண்டு உயிரிழப்புகளை பொறுத்தவரை இதயம், சிறுநீரகம் பாதிப்பு போன்ற இணை நோய்கள் இருந்தது. அவர்கள் உயிரிழப்பதை கொரோனா உயிரிழப்பாக கருத முடியாது. அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை செய்ய எந்த
அவசியமும் இல்லை. கண்காணித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளையும் மத்திய சுகாதாரத் துறை விதிக்கவில்லை.