"பீகாரில் வாக்குகளைத் திருட அனுமதிக்க மாட்டோம்" - ராகுல் காந்தி!
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையமானது, பீகாரில் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தம் நடத்தியது. ஆனால் அந்த தீவிர திருத்தத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது என்றும் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வாக்குரிமை யாத்திரை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உடன் பீகாரில் உள்ள அராரியாவில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,
"பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பொதுவான அறிக்கையை இந்திய கூட்டணி விரைவில் வெளியிடும். எதிர்க்கட்சி கூட்டணியின் அனைத்து அங்கத்தினர்களும் சித்தாந்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகின்றனர்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பது "தேர்தல் ஆணையமானது பாஜகவிற்கு உதவுவதற்காக வாக்குகளைத் திருடும் நிறுவனமயமாக்கப்பட்ட முயற்சி. பீகாரில் வாக்குகளைத் திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பாஜகவின் நலனுக்காகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது"என்று கூறினார்.