“நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்தின் பெயர் பொருந்தும் அளவுக்கு வேறு யாருடைய பெயரும் பொருந்தாது!” - நடிகை ராதா பேட்டி
நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்தின் பெயர் பொருந்தும் அளவுக்கு வேறு யாருடைய பெயரும் பொருந்தாது என்று நடிகர் ராதா தெரிவித்துள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்தில் கடந்த 10
நாட்களாகவே பொதுமக்கள், கட்சி தலைவர்கள் திரைப்பட பிரபலங்கள் என பல்வேறு
தரப்பினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று மதியம் நடிகை ராதா கோயம்பேட்டில் உள்ள அவருடைய நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின், சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்று அவருடைய புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, நடிகர் சங்கத்திற்கு மறைந்த விஜயகாந்தின் பெயரை வைப்பது குறித்து கேள்வி எழுந்தது. அக்கேள்விக்கு பதிலளித்த அவர்,
நடிகர் சங்கத்திற்கு மறைந்த விஜயகாந்தின் பெயரை வைக்க வேண்டும்
என்பதை நினைக்க கூடாது, அதை முதலில் செய்ய வேண்டும். நடிகர் சங்கத்திற்கு அவருடைய பெயர் பொருந்தும் வகையில், வேறு யாருடைய பெயரும் பொருந்தாது. அவர் இருந்த போது நடிகர் சங்கத்தில் இருந்த ஒற்றுமை, தற்போது இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.
அவர் நடிகர் சங்கத்தில் இருந்தது ஒரு பொற்காலம் போன்றது. புலிக்குப் பிறந்தது பூனையாகாது. அவருடைய இரு மகன்களும் வாழ்க்கையில் முன்னேறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். பொதுமக்கள் அவருக்கு கொடுத்திருந்த ஆதரவு, நம்பிக்கையும் தொடர்ந்து அவருடைய குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும். அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கேள்விக்கு, ஒரு உயர்ந்த மனிதனுக்கு என்ன கடமைகள் செய்ய வேண்டுமோ அதை எல்லோரும் இணைந்து செய்ய வேண்டும் என்றும் கூறினார்.