“மது விலக்கை நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்” - அரசு மதுபான கடைகளை மூட கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து!
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் டாஸ்மாக்-க்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று(ஜூன்.04) நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது டாஸ்மாக் நிர்வாகத்தின் திண்டுக்கல் மேலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் தூரம் தவறானது. அதோடு வணிக பகுதியில் மதுக்கடை அமைந்திருந்தால் அதற்கு தூர கட்டுப்பாட்டு விதிகள் பொருந்தாது” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “டாஸ்மாக் கடை அப்பகுதி மக்களுக்கும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடையூறாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பொதுமக்களுக்கு இதுபோல இடையூறு ஏற்படாமல் பார்ப்பது மாநிலத்தின் கடமை. இந்திய அரசமைப்புச் சட்ட படி, ஊட்டச்சத்து தரத்தையும், வாழ்வின் தரத்தையும் உயர்த்துவதும், சுகாதாரத்தை மேம்படுத்துவதும் மாநிலத்தின் முதன்மையான கடமையாக கருத வேண்டும்.
சிகிச்சை தவிர போதைப்பொருள் கலந்த பானங்கள் மற்றும் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் போதை மருந்துகளின் நுகர்வை தடை செய்ய மாநிலம் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். எனவே, அரசு பொது மதுபான விற்பனைக் கடைகளை கூடுதலாக நிறுவுவதற்குப் பதிலாக, மது விலக்கை நடைமுறைப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
அதிக அளவில் டாஸ்மாக் கடைகளை திறப்பது முரண்பாடானது. அரசியலமைப்போடு இது ஒத்துப்போவதில்லை. தூர வரம்பு தொடர்பான நிர்வாக உத்தரவுகள் அல்லது விதிமுறைகள் மட்டும் எந்தவொரு சட்டப்பூர்வமான முடிவெடுப்பதற்கும் அடிப்படையாக அமைய முடியாது. டாஸ்மாக் கடை நிச்சயம் இடையூறாக இருக்கும். எனவே திண்டுக்கல் - திருச்சி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைய 2 வாரங்களில் மூட வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.