”ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும்” - நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே சமாதான முயற்சிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் டிரம்ப், அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
”அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, ரஷ்ய பெட்ரோலியத்தை வாங்கும் சீனாவிற்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரிகளை விதித்தால், ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு "100% க்கும் மிகக் குறைவாக உள்ளது. கூட்டணியின் சில உறுப்பினர்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவது அதிர்ச்சியூட்டுகிறது. இது ரஷ்யா மீதான உங்கள் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் இந்தியாவிற்குப் பிறகு ரஷ்ய எண்ணெயை வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக நேட்டோ உறுப்பினர் துருக்கி இருந்து வருகிறது. மேலும் நேட்டோ அமைப்பில் உள்ள ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிகின்றன.