For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்" - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் !

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
11:14 AM Jan 28, 2025 IST | Web Editor
 மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்    எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
Advertisement

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் 13 பேர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர்.

Advertisement

மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். தப்பிச் செல்ல முயற்சித்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் இரண்டு மீனவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீனவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " 25.1.2025 ம் தேதி வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதும், மீனவர்களது படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்வதும், சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது என்றும், திமுக அரசு மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது வேலை முடிந்துவிட்டதாக கருதி அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுவதாக பாதிக்கப்படும் மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், படகுகளை பறிமுதல் செய்வதை தடுக்கவும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் 39 எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்க வலியுறுத்துகிறேன்.

மத்திய அரசும் காலம் தாழ்த்தாது உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திமுக சார்பில் வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement