For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'அறிவிக்கப்படாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்' - அமைச்சர் பி.கே. சேகர்பாபு!

அறிவிக்கப்படாத திட்டங்களையும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அறிவித்து செயல்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
11:04 AM Aug 13, 2025 IST | Web Editor
அறிவிக்கப்படாத திட்டங்களையும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அறிவித்து செயல்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 அறிவிக்கப்படாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்    அமைச்சர் பி கே  சேகர்பாபு
Advertisement

Advertisement

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 'மக்கள் முதல்வரின் மனிதநேய விழா' கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம். காலனி மற்றும் வெற்றி நகர் பகுதிகளில் 175-வது நாளாக 'அன்னம் தரும் அமுதக் கரங்கள்' நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, ஏழை எளிய மக்களுக்கு காலை உணவை வழங்கினர். இந்த 175-வது நாள் நிகழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, அமைச்சர்கள் இருவரும் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, இது குறித்து பேசினார். "இந்த அன்னதான நிகழ்ச்சி மூலம் சராசரியாக ஒரு நாளைக்கு 1,200 பேர் என, இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும், அண்மையில் அறிவிக்கப்பட்ட 'தாயுமானவர் திட்டம்' குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்தார். "ஒரு ஆட்சி அமைந்தவுடன் அனைத்துத் திட்டங்களையும் ஒரே நாளில் அறிவிக்க முடியாது. முதலில் தேர்தல் வாக்குறுதிகள், பின்னர் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப, நிதிநிலைக்கு ஏற்றவாறு திட்டங்களை படிப்படியாகச் செயல்படுத்தி வருகிறோம்" என்று விளக்கமளித்தார்.

"தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மட்டுமில்லாமல், மக்களின் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அறிவிக்கப்படாத பல்வேறு புதிய திட்டங்களையும் நாங்கள் அறிவித்துச் செயல்படுத்தி வருகிறோம்" என்று அவர் கூறினார். இத்தகைய மக்கள் நலத் திட்டங்களை விமர்சிக்காமல், அதன் நன்மைகளைப் புரிந்துகொண்டு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement