கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே தொடர் மழையால் நேற்று அணைக்கு விநாடிக்கு 1003 கனஅடி நீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 260 கனஅடி நீர் அதிகரித்து விநாடிக்கு1290 கனஅடியாக நீர் வரத்து வந்துக் கொண்டிருக்கிறது.
இதனால் அணையின் பாதுகாப்புக் கருதி 1290 கனஅடிநீர் அணையில் உள்ள 5 மதகுகளின் வழியாக திறந்து விடப்படுவதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
இதன் காரணமாக ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்துள்ளார். மேலும் வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடிகளில் 41.33 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையிலிருந்து வெளியேறும் நீரில் நுரைப்பொங்கி செல்கிறது. வழக்கமாக மழைக்காலங்களில் நுரை அதிகரித்து காணப்படுகிறது.