ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தொடர் மழையின் காரணமாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வரும் நீரின் அளவு அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 6500 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 8,500 கன அடியாக நீர் வரத்து உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் முதல் திடீரென உயரத் தொடங்கிய நீர்வரத்து, பல மடங்கு அதிகரித்தது. வினாடிக்கு 50,000 கன அடி நீர் வரை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 6.30 க்கு நீர்வரத்து மேலும் உயர்ந்து, வினாடிக்கு 78 ஆயிரம் கன அடி நீர் வந்தது. தற்போது மேலும் நீர்வரத்து உயர்ந்து 90 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் காவேரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பரிசல் இயக்கவும், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளிலும், காவிரி கரையோரங்களிலும் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் குளிக்க தடை விதித்த மாவட்ட நிர்வாகம், இன்று சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.