“பாஜக, பாமக இடம் பெற்றுள்ள கூட்டணிக்கு விசிக செல்லாது” - திருமாவளவன் எம்.பி. திட்டவட்டம்!
மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகி முடக்காத்தான் பாண்டியன் நினைவேந்தல் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் பேசினார்.
அவர் பேசியதாவது, “திமுக ஆளும் கட்சியாக இருக்கும் போதே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நெருக்கடிகள் வருவது உண்மைதான். அரசியல் கட்சிகளின் கொடிகளை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் விசிக கொடிகளை மட்டும் அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள். அரசியல் களத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஒரு பிரச்சனையை மட்டும் மையமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
திமுக-விடம் விசிக முன்வைக்கும் 100 கோரிக்கைகளில் 98 கோரிக்கைகள் நிறைவேறுவதில்லை. அதற்காக கூட்டணியை விட்டு வெளியே வர முடியாமா?இந்திய அரசியல், தமிழ்நாடு அரசியல் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலன் சார்ந்து தான் கூட்டணி வைக்கப்படுகிறது. அரசியலில் நிதானம், சகிப்புத்தன்மை, பொறுமை தேவை. நமக்கு ஆதரவான சக்திகள் யார் என்பதை அறிவதில் தெளிவு தேவை.
கொள்கை அடிப்படையில் எதிரிகள் யார் என்பதை முடிவெடுப்பதில் துணிவு தேவை. பாஜக, பாமக ஆகிய இரண்டு கட்சிகள் இடம் பெற்றுள்ள கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு போதும் செல்லாது. அதிமுகவோடு பாஜக கூட்டணியில் இருப்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுகவோடு செல்ல முடியாது. கூட்டணியில் இருக்கும் போது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியை மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடையாது”
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.