For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை" - அமித்ஷா பேச்சு!

07:10 AM Jun 18, 2024 IST | Web Editor
 மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை    அமித்ஷா பேச்சு
Advertisement

மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொடூர சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி நடந்திருந்தாலும், இது தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் ஜூலை மாதம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல கலவரங்கள் தொடர்ந்து வெடித்து கொண்டே இருந்த நிலையில் பலரும் பிரதமர் மோடியை மணிப்பூரை வந்து பார்வையிட வலியுறுத்தினர்.  ஆனால் மோடி செல்லவில்லை.

இதற்கு எதிர்க்கட்சிகள் பல விமர்சனங்களை முன்வைத்தன.  இதனைத்தொடர்ந்து தேர்தலின் போதும் பாஜக மணிப்பூரில் பிரசாரம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மணிப்பூர் மாநில நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று (ஜூன் 17) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி, மணிப்பூர் டிஜிபி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மணிப்பூரில் இனி வன்முறை நிகழக்கூடாது என்பதை அதிகாரிகள் உறுதிபடுத்த அமித்ஷா அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கூட்டத்தில் அவர் பேசியதாவது, “மணிப்பூரில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த தேவைப்பட்டால் கூடுதலாக மத்திய படைகள் அனுப்பி வைக்கப்படும். மணிப்பூரில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்ப மத்திய படை போலீசார் அனுப்பி வைக்கப்படுவார்கள். வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்" என தெரிவித்தார்.

Tags :
Advertisement