For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசியல் பேசிய #ActorVijay திரைப்படங்கள்!

11:45 AM Sep 05, 2024 IST | Web Editor
அரசியல் பேசிய  actorvijay திரைப்படங்கள்
Advertisement

விஜய் தனது அரசியல் என்ட்ரியை அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்திருந்தாலும், அதற்கு முன் தனது படங்களின் மூலம் அரசியல் ஆசையை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்திருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் விஜய் படங்களில் பேசிய அரசியலைப் பார்ப்போம்.....

Advertisement

அரசியலுக்கு அடித்தளமிட்ட தலைவா!

கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது ‘தலைவா’. ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்கினார். ‘அரசியல் என்ட்ரி’க்கான விதையை அழுத்தமாக தூவியிருந்தார். காரணம் ‘தலைவா’ என்ற டைட்டில் என்பதைத் தாண்டி ‘டைம் டூ லீட்’ என்ற லீட் தான். ஆனால் அந்த லீட் கொடுத்ததற்காக ‘லீடர்’களின் முன் ரிலீஸுக்காக நிற்கவேண்டிய சம்பங்களும் நடந்தன. இந்தப் படத்தில் சத்யராஜுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழும். முன்னதாக சத்யராஜ் கதாபாத்திரம் அறிஞர் அண்ணாவை காட்சியப்படுத்தியிருந்ததாக பல கருத்துகள் எழுந்தன. அவருக்குப் பின் அந்த இடத்தை விஜய் நிரப்புவதாக காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக ‘பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால், வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்’ என்ற பாடல் வரி படத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கும்.

அனல் பறந்த அரசியல் வசனங்கள்!

பிறகு வந்த விஜய்யின் ‘ஜில்லா’ வெகுஜன சினிமா பாணியில் இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸை வைத்து விஜய் தீட்டிய ‘கத்தி’ படம் அரசியல் கட்சிகளை குத்தியிருந்தது. ‘காத்துல ஊழல் பண்ற ஊருயா’ இது 2ஜி ஊழலை வெளிப்படையாக விமர்சித்து இறங்கி அடித்திருப்பார் விஜய். அப்போது 2ஜி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான காங்கிரஸ் அரசாங்கம் தோல்வியுற்று, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் வென்றிருந்த சமயம். தமிழ்நாட்டிலும் ஆளும் கட்சியாக அதிமுக இருந்தது. தவிர, விவசாயிகள் பிரச்னை, கார்ப்பரேட் அரசியல், ஒற்றை வரி கம்யூனிச விளக்கம் என ‘கத்தி’ அதன் அரசியலால் ஷார்ப்பாக இருந்தது. ‘புலி’ படத்தை எந்த வகையறாவிலும் சேர்க்க முடியவில்லை. ‘தெறி’ திரைப்படம் பழிவாங்கும் கதையாக கமர்ஷியல் தளத்தில் வென்றது.

கல்வி நிறுவனங்களை விமர்சித்த பைரவா - சுகாதாரத் துறையை கேள்வி எழுப்பிய மெர்சல்!

‘பைரவா’ தனியார் கல்வி நிறுவனங்களை விமர்சித்தது. அதுவரை ‘இளையத் தளபதி’ என்ற அடைமொழியுடன் வரும் விஜய்யின் பெயர் ‘மெர்சல்’ படத்தில் ‘தளபதி’ என மாற்றப்பட்டது. தனியார் மருத்துவமனைகள் மீதான விமர்சனத்தைப் பேசிய மெர்சல், மோடி அரசின் ஜிஎஸ்டி திட்டத்தை நேரடியாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. பாஜகவினரும் படத்துக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தது.

இலவசங்களை விமர்சித்த சர்கார்!

அடுத்து மீதியிருக்கும் அதிமுகவை விமர்சிக்க ஏ.ஆர்.முருகதாஸுடன் விஜய் கைகோத்த படம் சர்கார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரை வில்லி கதாபாத்திரத்துக்கு சூட்டியதிலிருந்து இலவசங்களை விமர்சித்தது வரை திராவிட கட்சிகளை விமர்சித்தது படம். இந்த படத்திற்கு இலவசங்கள் குறித்த புரிதலற்ற தன்மை என படத்துக்கு எதிரான கண்டனங்கள் வலுத்தன. சர்கார்-க்கான ஆசை இருந்தால் மட்டும்பத்தாது அது தொடர்பான அரசியல் புரிதலும் தேவை என கருத்துகள் எழுந்தன.

உருவகேலிக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிரான விஜய்யின் படங்கள் தான் விமர்சிக்கப்பட வேண்டியவை. காரணம் தன்னுடைய படத்தின் கருத்துகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை சென்று சேரும் ‘மாஸ்’ நடிகரான விஜய், ‘பிகில்’ படத்தில் உருவகேலிக்கு ஆதரவாக ‘குண்டம்மா’ என பேசியிருந்தது பலரையும் காயப்படுத்தியது. பின்னர் அதற்கான விளக்க வார்த்தைகளால் எந்த பயனுமில்லை. ஆனால், ‘மாஸ்டர்’ படத்தில் பெண்களின் ஆடைச் சுதந்திரம் தான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என கூறும் போது, அதற்கு எதிராக கொதித்தெழுந்து விஜய் பேசும் வசனங்கள் பாராட்டுக்குரியவை. இந்த புரிதல்தான் அரசியலிடம் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பவை.

வெற்றி, தோல்வி என மாறி மாறி வந்தாலும் சில காலகட்டங்கள் அவருக்கு கொஞ்சம் சோதனையாக அமைந்ததை மறுக்க முடியாது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில், அவரை தூக்கி நிறுத்திய படம் தான் காவலன். ஃப்ரண்ட்ஸ் படத்தின் மூலம் விஜய்க்கு ஒரு சூப்பர்ஹிட் கொடுத்த சித்திக் மலையாளத்தில், தான் இயக்கிய பாடிகார்ட் படத்தை, தமிழில் காவலனாக மாற்றினார். ஆக்ஷன் ஹீரோ விஜய் இதில் அழகான காதலனாகவே மாறிப்போனார்.

விஜய் அரசியல் என்ட்ரிக்கு சில மாதங்களுக்கு முன்னால் வெளியானது ‘லியோ’. இந்திய சூழலில் சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் தருணத்தில், ‘பீஸ்ட்’, ‘வாரிசு’, ‘லியோ’ பேசிய அரசியல் ஆபத்தானது. இறுதியாக ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “நான் இப்படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவில்லை; முதல்வர் ஆனால் நடிக்க மாட்டேன். தலைவன் நல்லவனாக இருந்தால், எல்லாமே நல்லதாக மாறும். நெருக்கடியான நேரத்தில் தலைவன் வருவார். அவர் நல்ல சர்கார் அமைப்பார்” என பேசியிருந்தார்.

Tags :
Advertisement