ஈழத்தமிழர்கள் மீது தனிப்பற்றுக் கொண்ட விஜயகாந்த்!
ஈழத்தமிழர்கள் மீது தனிப்பற்றுக் கொண்டவராக விஜயகாந்த் வாழ்ந்திருக்கிறார். அவரது வாழ்நாளில் இலங்கை தமிழர்களுக்கு பிரச்னை ஏற்படும் போதெல்லாம் குரல் கொடுத்ததோடு, மிகுந்த பற்றும் கொண்டவராகவும் திகழ்ந்துள்ளார்.
ஜூலை - 1983-ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரின் போது சக நடிகர், நடிகைகளை போல கூட்டத்தோடு கூட்டமாக இல்லாமல், தன்னை போன்ற அன்றைய இளம் நடிகர்களுடன் இணைந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி, படுகொலையை நிறுத்தவும், நீதி வேண்டியும் தமிழ்நாடு ஆளுநரிடம் விஜயகாந்த் மனு அளித்தார்.
இயக்குநர் மணிவண்ணன், ராதா ரவி போன்றவர்களுடன் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டிய அன்றைய சினிமா கதாநாயகர் விஜயகாந்த் மட்டுமே.
1986 ஆம் ஆண்டு அதே காரணங்களுக்காக சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார் விஜயகாந்த். அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தும், 1990 ஆம் ஆண்டுகளில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு உதவி புரிந்தும் வந்தார். ஈழத்தமிழர்கள் உணர்வை உணர்ந்தவராக, ``ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது" என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டைத் தவிர்த்தார். பின்னாள்களில் அவரின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
தனது 100-வது படத்துக்கு `கேப்டன் பிரபாகரன்’ எனவும், தனது மூத்த மகனுக்கு 'விஜய பிரபாகரன்' எனவும் பெயர் வைத்து ஈழத்தின் மீதும் தனக்கிருந்த பற்றைப் பறைசாற்றினார்.
பிறப்பால், இனத்தால் திராவிடராக இருந்தாலும் மனதாலும், வாழ்வியலாலும்
ஒரு தமிழராக தன்னை தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை தன்னுடைய தலைவன் என அச்சமின்றி எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதே அறிவித்தது என துணிச்சல், கொள்கை உறுதி, அஞ்சாமை, அறம் போன்ற குணங்களுக்காக விஜயகாந்த் அனைவராலும் நினைவுக்கூறப்படுகிறார்.