“விஜய் எடுப்பார் கைப்பிள்ளை...பாஜக அவரை இயக்குகிறது” - மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!
மதுரை யானைக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள், தலைமை பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் மமக பொது செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பிறகு ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “ஜூலை 6 ஆம் மனிதநேய மக்கள் கட்சி இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் பேரணி & மாநாடு நடைபெறுகிறது, இஸ்லாமியர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெறுகிறது.
இந்தியாவில் 15 சதவீத இஸ்லாமியர்கள் உள்ளன. ஆனால், சதவீதத்துக்கு ஏற்ற வரையில் அரசியல் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுவதில்லை. நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் இஸ்லாமியர்களுக்கு அரசியல்
பிரதிநிதித்துவம் வழங்குவதில்லை. இஸ்லாமிய மக்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் தர வேண்டும். நேரு காலத்தில் இருந்து இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் தரப்படுவதில்லை. பாசித்தை எதிர்க்க கூடிய திமுக கூட்டணியில் எந்தவொரு சலனமும் இன்றி பயணிக்க வருகிறோம்.
விஜய் தற்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். காலப்போக்கில் தான் அவருடைய நிலைப்பாடு தெரியும். விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியவரை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்துள்ளார். விஜய் தமிழ்நாடு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார். விஜய் எடுப்பார் கைப்பிள்ளை போல செயல்பட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் பாஜக விஜயை இயக்கி வருகிறது என தெள்ளத் தெளிவாகிறது. திமுக ஆட்சி குறித்து பேச பாஜக, அமித் ஷாவுக்கு தகுதியில்லை. மத்திய அரசு அறிவித்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்றவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.