For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாணவர்களுக்கு 2 கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார் விஜய்!

10:53 AM Jun 10, 2024 IST | Web Editor
மாணவர்களுக்கு 2 கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார் விஜய்
Advertisement

2023-2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் விருது வழங்கிச் சிறப்பிக்கும் கல்வி விருது விழா இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

Advertisement

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம்  “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார்.  2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என சொல்லிக்கொண்டிருக்கும் அவர் கடந்த சில ஆண்டுகளாகவே மக்களை கவரும் வகையில் பல்வேறு செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.  அந்த வகையில் கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளை தொகுதி வாரியாக அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்கத்தொகையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் கடந்தாண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மாணவ, மாணவியர்களை விஜய் ஊக்கப்படுத்திய சம்பவம் ஒரு பக்கம் அரசியல் நிகழ்வாக பார்க்கப்பட்டாலும்,  மறுபக்கம் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது.  இந்த நிலையில் 2வது ஆண்டாக, இந்த ஆண்டும் 2023 -2024 கல்வியாண்டில் தொகுதிவாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் கல்வி விருது விழா வழங்க முடிவு செய்துள்ள விஜய் அதனை இரு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளளார்.

இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் "தமிழக வெற்றிக் கழகம்" சார்பாகப் பாராட்ட உள்ளார்.  முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று, சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது.

இதில் அரியலூர்,  கோயம்புத்தூர்,  தர்மபுரி,  திண்டுக்கல், ஈரோடு,  கன்னியாகுமரி,  கரூர், கிருஷ்ணகிரி,  மதுரை,  நாமக்கல்,  நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,  சேலம், சிவகங்கை,  தென்காசி,  தேனி, தூத்துக்குடி,  திருநெல்வேலி,  திருப்பூர்,  விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை,  கடலூர்,  கள்ளக்குறிச்சி,  காஞ்சிபுரம்,  காரைக்கால்,  மயிலாடுதுறை,  நாகப்பட்டினம்,  பெரம்பலூர்,  புதுச்சேரி, ராணிப்பேட்டை,  தஞ்சாவூர்,  திருவள்ளூர், திருவண்ணாமலை,  திருவாரூர்,  திருப்பத்தூர், திருச்சி, வேலூர்,  விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement