For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜெகநாதர் கோயிலுக்குள் வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம்: வி.கே.பாண்டியனுக்கு பாஜக கண்டனம்!

05:16 PM Dec 22, 2023 IST | Web Editor
ஜெகநாதர் கோயிலுக்குள் வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம்   வி கே பாண்டியனுக்கு பாஜக கண்டனம்
Advertisement

பிரபல யூடியூபர் காமியா ஜனி,  பிஜேடி தலைவர் வி.கே பாண்டியனுடன் பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் கலந்துரையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சை வெடித்துள்ளது.

Advertisement

பிஜு ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும்,  தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும்,  ஐஏஎஸ் அதிகாரியுமாக இருந்தவருமான வி.கே பாண்டியன் மற்றும் யூடியூபர் காமியா ஜனி ஆகியோர் ஒடிசாவில் உள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோயிலுக்கு சமீபத்தில் சென்றுள்ளனர்.  இது குறித்து யூடியூபர் காமியா ஜனி பதிவிட்டுள்ள வீடியோவில்,  ஜெகநாதர் கோயிலில் வழங்கப்படும் மஹாபிரசாத்தின் முக்கியத்துவம்,  கோயில் மேம்பாட்டிற்காக நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து வி.கே பாண்டியன் விரிவாகப் பேசியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து,  மாட்டிறைச்சி உண்பதாகக் கூறப்படும் ஒருவர் கோயிலுக்குள் நுழைந்தது பல கோடி இந்துக்களின் மத உணர்வுகள் காயப்படுத்தியுள்ளதாக ஒடிசா மாநில பாஜக பொதுச்செயலாளர் ஜடின் மோஹண்டி குற்றம் சாட்டியுள்ளார்.  இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

"பிஜேடி தலைவர் வி.கே பாண்டியன் மற்றும் யூடியூபர் காமியா ஜனி ஆகியோர் பூரி ஜெகநாதர் கோயிலில் மஹாபிரசாதத்தை உண்ணும் வீடியோயை எடுத்துள்ளனர்.  கோயில் வளாகத்திற்குள் வீடியோ எடுக்க அனுமதி இல்லாத நிலையில்,  இச்செயல் சட்டவிரோதமானது.  இதற்கு முன்னதாக காமியா ஜனி மாட்டிறைச்சி சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  ஜெகநாதர் கோவிலுக்குள் மாட்டிறைச்சி உண்பவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை.

பல கோடி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக,  வி.கே பாண்டியன் மற்றும் காமியா ஜனி மீது ஐ.பி.சி 295-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்களை கைது செய்யாவிட்டால், நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம்."

இவ்வாறு ஒடிசா பாஜக பொதுச்செயலாளர் ஜடின் மோஹண்டி கூறியுள்ளார்.

Tags :
Advertisement