For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி | சட்லஜ் நதியில் 7-வது நாளாக நீடிக்கும் தேடுதல் பணி...!

01:52 PM Feb 10, 2024 IST | Web Editor
விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி   சட்லஜ் நதியில் 7 வது நாளாக நீடிக்கும் தேடுதல் பணி
Advertisement

ஹிமாச்சல பிரதேசத்தில் விபத்தின்போது மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 7-வது நாளாக நீடிக்கிறது. 

Advertisement

ஹிமாச்சலபிரதேசத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 7ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி.  தொழில் அதிபரும்,  சினிமா இயக்குனருமான இவர்,  தாம் புதிதாக இயக்கவிருந்த திரைப்படத்திற்கு லொக்கேஷன் பார்ப்பதற்காக ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.  பின்னர் வெற்றி துரைசாமியும் அவரின் உதவியாளருமான கோபிநாத் என்பவரும் காரில் சிம்லா நோக்கி சென்றுள்ளனர்.  கார் கின்னவுர் மாவட்டத்தில் உள்ள கசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின்,  கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆற்றில் விழுந்த காரை கயிரை கட்டி மீட்டனர்.  காரில் பயணித்த மூவரில் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில்,  வெற்றி துரைசாமியின் உதவியாளர் கோபிநாத் காயங்களுடன் உயிர் தப்பினர்.  ஆனால் வெற்றி குறித்த தகவல் மட்டும் கிடைக்கவில்லை.  உள்ளூர் மக்கள் உதவியோடு விபத்தில் காணாமல் போன வெற்றி துரைசாமியை போலீசார் தேடத் தொடங்கினர்.  ஆழ்கடல் நீச்சல் வீரர்களை கொண்டு சட்லஜ் ஆற்றில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.  இருப்பினும் பாறை இடுக்குகளில் மூளை திசு கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.  வெற்றி பயன்படுத்திய சூட்கேஸ் மற்றும் செல்போனும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில்,  வெற்றியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அவரது தந்தை துரைசாமி அறிவித்துள்ளார்.  எனினும், அவரை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

இமயமலை தொடரில் பிறக்கும் சட்லஜ் ஆறு,  சிந்து நதியின் கிளை ஆறுகளில் ஒன்றாகும். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இந்தியாவிற்குள் நுழையும் இந்த ஆறு மூன்று பெரிய மலைத் தொடர்களையும் , மிகப்பெரிய பள்ளத்தாக்குகளையும் கடந்து செல்கிறது.  சட்லஜ் ஆறு செல்லும் வழிகள் யாவும் கரடுமுரடான பாறைகளை கொண்ட பகுதிகளாகவே உள்ளது.  பனிப்பாறைகளில் இருந்து உருவாகும் இந்த ஆற்றில் நீரோட்டம் எப்போதும் அதிகரித்தே காணப்படுவது வழக்கம்.  விபத்து நிகழ்ந்த பகுதியில் கடும் பனிப்பொழிவானது தற்போது ஏற்பட்டுள்ள நிலையில்,  ஆற்றில் உள்ள கரடுமுரடான பாறைகளால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர் மேலும் கசாங் நாலா பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் அதிகரித்து காணப்படும் நீர் வரத்தே மீட்பு பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெற்றியின் உடல் எடை கொண்ட பொம்மை ஒன்றை ஆற்றில் வீசி, அது எந்தப் பாதையில் பயணிக்கிறது என்பதை ஆய்வு செய்து அதன் மூலம் வெற்றியை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த தேடுதல் வேட்டையில் உள்ளூர் பொதுமக்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து நிகழ்ந்த பகுதியில் இதுவரை சிக்கியவர்களில் சிலரது உடல்களே மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவர் குறித்த தகவல் ஓரிரு நாட்களில் தெரிய வரும் என ஹிமாச்சல மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement