வேங்கைவயல் விவகாரம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் !
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர்.
இதில் வேங்கைவயலை சேர்ந்த 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களது பெயர் இடம்பெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் உண்மை குற்றவாளிகளை கண்டறியவும், சி.பி.ஐ. விசாரிக்க கோரியும் வேங்கைவயலில் நேற்று முன்தினம் முதல் அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்று பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தையொட்டி வேங்கைவயல் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்திற்குள் வெளிநபர்கள் யாரும் செல்லாத வகையில் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய 3 பேர் சார்பில் வி.சி.க.வழக்கறிஞர் மலர்மன்னன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "புகார்தாரரை இதுவரை விசாரிக்காமல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை நகல் வேண்டும். குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. பாதிக்கப்பட்ட நபர்களையே குற்றம் சாட்டி உள்ளனர். எனவே சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குறப்பத்திரிகையை ஏற்க கூடாது. சி.பி.ஐ. விசாரணை வேண்டும். 3 பேரின் பெயர்களையும் குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.