பல்வேறு குற்ற வழக்குகள் - டெல்லியில் 4 குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
தலைநகர் டெல்லியின் ரோகிணி என்ற பகுதி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த காரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் மற்றும் பீகார் சிறப்பு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது, அந்த காரில் இருந்த 4 பேர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் காரில் பயணம் செய்த 4 பேருக்கும் குண்டு அடிபட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்டு காவல்துறையினர் ரோகினி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். பரிசோதனையில் குண்டு அடிபட்ட நான்கு பேரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் என்கவுண்டரில் உயிரிழந்தவர்களின் பின்னணியை ஆராய்ந்த போலீசார், சுட்டுக்கொல்லப்பட்ட ராஜன் பதக், பிமலேஷ் மகட்டொ, மனீஷ் பதக் ஆகியோர் பீகார் மாநிலம் சீதா மார்க்கி மாவடத்தை சேர்ந்தவர்கள் என்றும் அமன் தாக்கூர் என்பவர் டெல்லி கார்வால் நகர் பகுதியில் வசிப்பவர் என்றும் தெரியவந்துள்ளது.
இவர்கள் நான்கு பேரும் பிகாரில் பல்வேறு கொலை வழக்குகளிலும், கொள்ளை வழக்குகளிலும் தேடப்படும் குற்றவாளிகள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுண்டர் சம்பவம் நள்ளிரவு 2.20 மணி அளவில் நடைபெற்றதாக டெல்லி காவல்துறை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.