’வாஜ்பாய் நினைவு தினம்’ - பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்டோர் அஞ்சலி!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை யொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, கஜேந்திர சிங் ஷெகாவத், ஜே.டி.யூ எம்.பி சஞ்சய் ஜா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பிரதமர் மோடி வாஜ்பாய் குறித்து தனது எக்சஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ அடல் பிகாரி வாஜ்பாய் ஆற்றிய அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும், வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடல் பிகாரி வாஜ்பாய் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவர் ஆவார். வாஜ்பாய் மூன்று முறை நாட்டின் பிரதமராகப் பணியாற்றியுள்ளார். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர் கடந்த ஆகஸ்ட் 16, 2018 அன்று காலமானார். 2015 ஆம் ஆண்டில், அவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. மேலும்,அவரது பிறந்த நாளான டிசம்பர் 25, நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது.