மாஸ்டர் நீதிமன்றத்தில் வடிவேலு ஆஜர் - குறுக்கு விசாரணைக்கு அனுமதி கேட்ட சிங்கமுத்து தரப்பு!
யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக வழங்கும்படி, நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக முன்பு விசாரணை நடந்தபோது, வடிவேலு தரப்பில் இந்த வழக்கை தாக்கல் செய்த பிறகும், சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் ஆஜராக கடைசி வாய்ப்பாக வழக்கை தள்ளிவைக்க வேண்டும் எனவும் சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் வடிவேலு மீது அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாத மனுத் தாக்கல் செய்ய வேண்டும் சிங்கமுத்துவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போல் அவரும் த்தரவாத மனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து இந்த வழக்கின் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக விசாரணையை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியது.
இந்நிலையில், இந்த சாட்சியம் அளிப்பதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் வடிவேலு ஆஜராகி சாட்சியம் அளித்தார். அதன் பின்பு ஆஜரான சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர், வடிவேலுவிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கோரி மாஸ்டர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், குறுக்கு விசாரணையை பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்காக வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதை பதிவு செய்துகொண்ட மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர், வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து அங்கே முறையீட்டு கொள்ளுங்கள, அதில் உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.