ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஜாதி கான். கடந்த 2022-ல் இவர் அமுதாபியில் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றி வந்தார். அப்போது இவரது பராமரிப்பில் இருந்த நான்கு மாத குழந்தையை கொலை செய்ததாக இவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த அபுதாபி நீதிமன்றம், 2023ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது.
ஆனால் அந்த குழந்தை வழக்கமான தடுப்பூசி போடப்பட்ட பிறகு இறந்ததாக இவர் தரப்பில் கடந்தாண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இவரது மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த அந்நாட்டு அரசு இவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து இவர் வாத்பா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பிப்.21ஆம் தேதி ஷாஜாதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடவும், அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லை தூக்கிலிடப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்தவும் கோரி அவரது தந்தை வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, அதே தகவலைக் கோரி சனிக்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் கடைசியாக பிப்.15ஆம் தேதி தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், தனக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, தனது பெற்றோருடன் பேசுவதே தனது இறுதி விருப்பம் என்றும் தெரிவித்ததாகவும் கூறியதாக கூறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தநிலையில், ஷாஜாதி கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியே தூக்கிலிடப்பட்டதாகவும், அவரது அடக்கம் மார்ச் 5 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. பிப்ரவரி 28 ஆம் தேதியே இந்த தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதனைக்கேட்ட நீதிபதி சச்சின் தத்தா இது “மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று குறிப்பிட்டார்.