தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்கு சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷா - தந்தையின் மறைவுக்கு நேரில் ஆறுதல்!
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் (வயது 93). வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். இதனையடுத்து அவரது உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, உடனடியாக அவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது மூப்பு மற்றும் சிறுநீர் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஏப்ரல் 8ம் தேதி இரவு குமரி அனந்தன் சிசிக்கை பலனின்றி உயிரிழந்தார். இவர் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் குமரி அனந்தனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று குமரி அனந்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில் தமிழ்நாடு வருகை தந்துள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தமிழ்நாட்டின் முக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்திற்கு சென்று அவரது தந்தை மறைவு குறித்து ஆறுதல் தெரிவித்தார்.