கச்சத்தீவை யாருடைய ஆட்சியில் தாரை வார்த்தீர்கள்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"எதிர்க்கட்சி என்கிற முறையில் டாஸ்மாக் ஊழல் குறித்து பேச அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கிறார்கள். டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில்
நடைபெற்ற சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது.
டாஸ்மாக் விவகாரத்தில் திமுக அரசு முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணம் ஆகி உள்ளது. டாஸ்மாக் வழக்கை வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் சென்றது ஏன்? நமது மாநிலத்தில் வழக்கு நடந்தால், திமுக செய்த தவறு ஊடகங்களில் வெளியாகும் என அச்சம். தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றம் நேர்மையான உயர்நீதிமன்றம் என அனைவருக்கும் தெரியும்.
டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அஞ்சுபவர்கள் அல்ல. கச்சத்தீவை யாருடைய ஆட்சியில் தாரை வார்த்தீர்கள்? எதை மறைக்க பார்க்கிறீர்கள்? மீனவர்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முதலமைச்சர் முயற்சி செய்கிறார்.
இந்த 9 மாதத்தில் எந்த அறிவிப்பை திட்டமாக செயல்படுத்த முடியும்? 16 ஆண்டுகாலம் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது திமுக அரசு என்ன செய்தது? நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக அரசு தான். தமிழ்நாட்டிற்கு திமுக அரசு செய்த துரோகம் பற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.