அரக்கோணம் | இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர்கள் மூவர் உயிரிழப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கீழ் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 23). அவரது நண்பர் பிரேம் வயது (23). இவர்கள் இருவரும் நேற்று இரவு (ஏப்.14) 11.30 மணியளவில் சேந்தமங்கலத்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அதேபோல் ஆட்டுப்பக்கம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 21) மற்றும் அவருடைய நண்பர் ரஞ்சித் (வயது 21) ஆகியோர் ஆட்டு பக்கத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து சேர்ந்தமங்கலம் நோக்கி வந்தனர்.
அப்போது, ஆலப்பாக்கம் அருகே இந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வெற்றிவேல் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடன் சென்ற ரஞ்சித் மற்றும் பிரேம் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெமிலி காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அவர்கள், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரேம் உயிரிழந்தார். ரஞ்சித் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து நெமிலி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.