இரட்டை இலை விவகாரம் - தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி விளக்க மனு தாக்கல்!
அ.தி.மு.க உள் கட்சி விவகாரம், இரட்டை இலை சம்பந்தமாக இன்று பதில் மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இரட்டை இலை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி விளக்க மனுவை தாக்கல் செய்தார்.
அதில், “உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வழங்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க தொடர்பாக நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் முடியும் வரை இரட்டை இலை சின்னம் யாருக்கும் வழங்கப்படக் கூடாது. மேலும் கடந்தமுறை நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலுக்கு மட்டுமே உச்ச நீதிமன்ற உத்தரவு பொருந்தும். இதை வேறு தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தும் அதனை தேர்தல் ஆணையம் மீறி உள்ளது.
நிலுவையில் உள்ள சிவில் வழக்கு விசாரணை முடிவில் தீர்ப்பு பழனிசாமிக்கு எதிராக வருமேயானால், இடையில் கட்சி சின்னமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளதால், எதிர்தரப்புக்கு ஏற்படும் இழப்பை எப்படி சரி செய்ய முடியும்? என மனுவில் குறிப்பிட்டுள்ளார் .
மேலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் நகலையும் இணைத்துள்ளார். எந்த நீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமிக்கு சின்னத்தை வழங்க உத்தரவிடவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், புகழேந்தி ஒரு தரப்பினராக தவறாக சேர்க்கப்பட்டு உள்ளதாக ஊடக செய்தி மூலம் அறிந்து, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியதில், எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.