இரண்டரை வயது குழந்தை தலை துண்டித்து கொலை... விசாரணையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்த, தேசிங்குராஜா - டெய்சி தம்பதியரின் இரண்டரை வயது மகள் லெமோரியா. அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல்முருகன் என்பவரின் மகன் சஞ்சய். பி.ஏ,.ஆங்கில பட்டதாரியான இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில் நேற்று (மே.23) மாலை குழந்தை லெமோரியா தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட சஞ்சய் குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டின் பின்புறமாக சென்று, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை அறுத்து தலையை துண்டித்துள்ளார்.
தொடர்ந்து குழந்தையின் உடலை அப்பகுதியில் போட்டுவிட்டு, தலையை தூக்கிக் கொண்டு சென்றவர், அருகில் இருந்த ஊரணியில் வீசி உள்ளார். தலையில்லாமல் உயிரிழந்த நிலையில் இருந்த குழந்தையின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்த டிஎஸ்பி சபரிநாதன் தலைமையிலான போலீசார் ஊரணியில் குழந்தையின் தலையை தேடியும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன், ஊரணியில் குழந்தையின் தலையை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் சஞ்சய் தப்பி ஓடி எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
பட்டப்பகலில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையை தலை துண்டித்து மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து எமனேஸ்வரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.