கட்டணமில்லா பேருந்து எதிரொலி - தெலங்கானாவில் ஆண்கள் மட்டுமே பயணிக்கும் பேருந்து அறிமுகம்..?
கட்டணமில்லா பேருந்து எதிரொலியாக பெண்கள் அதிகளவில் பயணம் செய்வதால் தெலங்கானாவில் ஆண்கள் மட்டுமே பயணிக்கும் பேருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவின் 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த வருடம் நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள். இந்நிலையில்,தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்று தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது.
இதனைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து தெலங்கானா காங்கிரஸின் மூத்த தலைவர்களான பட்டி விக்ரமார்க்க மல்லு துணை முதலமைச்சராகவும் , தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி உள்ளிட்ட 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, அனைத்து பெண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும், வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம், விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம், கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா கார்டுகள் கல்வி (உதவித்தொகை) வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்து ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் முதற்கட்டமாக தெலங்கானா பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசு சாதரண மற்றும் விரைவு பேருந்துகளில் இலவச பேருந்து பயண திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் கடந்த டிசம்பர் 9 முதல் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில் கட்டணமில்லாத பேருந்து பயணத்தினால் பெண்கள் அதிகளவில் பயணம் செய்வதாகவும் ஆண்களுக்கு பேருந்துகளி;ல் இருக்கை கிடைப்பதில்லை எனவும் ஆண்கள் தரப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே ஆண்கள் மட்டுமே பயணிக்கும் புதிய பேருந்து வசதிக்கு தெலங்கானா அரசு ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.