இந்தியா மீதான விமர்சனத்தை factcheck செய்த எக்ஸ் - கோபமடைந்த டிரம்பின் ஆலோசகர்!
அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ ஆவார். அமெரிக்க வரிவிதிப்பு மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியாவை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். இந்த விமர்சனங்களை அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் பீட்டர் நவரோ நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியா லாபத்திற்காக மட்டுமே ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது. இதன்மூலம் கிடைக்கும் வருவாய் ரஷ்யாவின் போருக்கு உதவுகிறது. இதனால் உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்கள் இறக்கின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து எக்ஸ் தளமானது நவேரோவின் இந்த கருத்து மீது உண்மைதன்மை சரிபார்ப்பு நடவடிக்கையை எடுத்தது. அதில், ”நவரோவின் கூற்றுக்கள் பாசாங்குத்தனமானவை. எரிசக்தி பாதுகாப்பிற்காக ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது என்பது சர்வதேச சட்டத்தை மீறுவது ஆகாது. இந்தியாவை விமர்சிக்கும் அதே வேளையில், யுரேனியம் போன்ற பில்லியன் கணக்கான ரஷ்ய பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பீட்டர் நவரோ எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மக்ஸை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மக்களின் பதிவுகளில் பிரசாரத்தை எலான் மஸ்க் அனுமதிக்கிறார். உண்மை சரிபார்ப்பு குறிப்புகள் முட்டாள்தனமான குறிப்புகளாக உள்ளன. இந்தியா லாபம் ஈட்டுவதற்காக மட்டுமே ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. ரஷ்யா உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்குவதற்கு முன்பு இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கவில்லை. உக்ரேனியர்களை கொல்வதை நிறுத்துங்கள். அமெரிக்க வேலைகளை எடுப்பதை நிறுத்துங்கள் என்று தெரிவித்து உள்ளார்.