"திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று தமிழ்நாடு சட்பேரவை கூடியது. அதில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம் குறித்து சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "உங்கள் தொகுதி' திட்டத்தின் கீழ் எங்கள் தொகுதி சார்ந்த 10 கோரிக்கைகள் கேட்கப்பட்டன. நாங்களும் வழங்கினோம். ஆனால் பெரும்பாலான திட்டங்களை, சாத்தியமில்லை என கூறி நிராகரித்து விட்டீர்கள். மக்கள் சார்ந்த திட்டங்களை அளிக்கும் போது அதனை நிதி அதிகம் எனக்கூறி நிராகரிப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
"2 மாதங்களுக்கு ஒருமுறை நானே தலைமை தாங்கி இத்திட்டத்தை ஆய்வு செய்கிறேன். நிதிக்குட்பட்டு சாத்தியமுள்ள திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எந்த கட்சி பாகுபாடின்றி திட்டங்கள் நிறைவேற்றித் தரப்படுகிறது. எந்த திட்டத்தையும் கட்சி பாகுபாடுடன் நிறைவேற்றுவதில்லை. திருச்சியில் ரூ.290 கோடி செலவில், அமைய உள்ள மாபெரும் நூலகத்திற்கு, கல்வி கண் திறந்த 'பெருந்தலைவர் காமராஜர்' பெயர் சூட்டப்படும். கோவையில் நூலகம் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.