உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்களுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் வாக்குவாதம்...!
பேருந்துகளை எடுத்து செல்ல வரும் ஓட்டுநர்களுடன் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட நிறைவேற்றப்படாமல் உள்ள கடந்த 8 ஆண்டுகால கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்ககள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.
அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொமுச, ஏஐசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையிலிருந்து 68 பேருந்துகளுக்கு 42 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் போக்குவரத்து பணிமனையிலிருந்து பேருந்துகள் வெளியேறி விட்டது என கணக்கு காட்டுவதற்காக ஒரே ஓட்டுநர் 6க்கும் அதிகமான பேருந்துகளை பணிமனையிலிருந்து எடுத்து செல்வதாக குற்றம் சாட்டு எழுந்தது. இதையடுத்து, போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பேருந்தை எடுத்து சென்ற ஓட்டுநர் மற்றும் பணிமனை மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.