திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து!
ரயில்வே இருப்புப் பாதை சீரமைப்புப் பணி காரணமாக, திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான அனைத்து முன்பதிவில்லாத ரயில்களும் வெள்ளி, சனி (டிச. 22, 23) ஆகிய 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே மேலாளர் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தென் மாவட்டங்கள் அனைத்தும் தனித் தீவாக காட்சியளித்தன. அடிப்படை வசதிகள் இன்றி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தண்ணீரின் வேகத்தாலும், தேக்கங்களினாலும் சாலைகள், ரயில் தண்டவாளங்கள் என அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.
ரயில் நிலையம் மற்றும் தண்டவளப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கின. இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இருப்பு பாதைகளை சீரமைக்கும் பணிகள் முடிவடையாத்தால், வெள்ளி (டிச.22) , சனி (டிச.23) ஆகிய இரண்டு நாட்களுக்கு திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையிலான முன்பதிவில்லா ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே மேலாளர் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மதுரை ரயில்வே மேலாளர் கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பில், கூறியிருப்பதாவது;
பலத்த மழை, வெள்ளம் காரணமாக சேதமடைந்த செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் இடையேயான ரயில்வே இருப்புப் பாதையைச் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால், திருநெல்வேலி - திருச்செந்தூர் தடத்தில் அனைத்து முன்பதிவில்லாத ரயில்களும், தூத்துக்குடி - திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயிலும் (06667) வெள்ளி, சனி ஆகிய 2 நாள்களும் ரத்து செய்யப்படுகின்றன. இதே போல, வாஞ்சிமணியாச்சி - திருச்செந்தூர் தடத்தில் ரயில் சேவை, திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கபடுகிறது.