ரயில் டிக்கெட் முன்பதிவு - புதிய வசதிகள் அறிமுகம்!
ரயில் புறப்படும் 8 மணி நேரத்திற்கு முன் பயணிகள் அட்டவணை வெளியிடப்படும் என்று ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு பட்டியல் தயாராவதால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
இந்த நடைமுறையை மாற்றி ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன் பயணிகளின் அட்டவணையை தயாரிக்க ரயில்வே வாரியம் ஆலோசனை வழங்கியது. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, எந்த இடையூறும் இல்லாதவாறு இதை படிப்படியாக செயல்படுத்துமாறும் ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதிய நேர நிர்ணயம் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது. காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களுக்கு காத்திருப்பு பட்டியல் நிலவரம் முன்கூட்டியே தெரிந்துவிடும். தூர இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் வேறு ஏற்பாடு செய்யவும் அவர்களுக்கு நேரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.