பாகிஸ்தான் ரயில் கடத்தல் - 140 பயணிகள் மீட்பு, கிளர்ச்சியாளர்கள் 16 பேர் சுட்டுக்கொலை!
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில், பலோச் விடுதலை அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்கக்கோரி அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பலுச் மாகாணத்தின் வளங்களை சுரண்டும் அரசு, அப்பாவி மக்களை வஞ்சிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணியர் ரயில் நேற்று (மார்ச் 11) காலை சென்று கொண்டிருந்தது. தாதர் என்ற இடத்தை அடைந்தபோது, ரயில் இன்ஜினுக்கு சில மீட்டர் துார இடைவெளியில் தண்டவாளத்தில் தீடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.
உடனடியாக, பி.எல்.ஏ., எனப்படும் பலுச் விடுதலை ராணுவத்தினர் என்ற கிளர்ச்சிபடையினர் ரயிலை முற்றுகையிட்டனர். அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்ஜின் டிரைவர் உயிரிழந்தார். ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 450 பயணிகளை பலுச் அமைப்பினர் சிறைபிடித்தனர். பின்னர் பொதுமக்களை மட்டும் விடுவித்துவிட்டு, ராணுவ வீரர்கள் உட்பட 182 பேரை மட்டும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறை பிடித்ததும், 182 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறோம். கடந்த 15 மணிநேரத்திற்கும் கூடுதலாக அவர்கள் எங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். இந்த நடவடிக்கையின்போது, கூடுதலாக 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 16 பலுச் அமைப்பினர் உயிரிழந்தனர். மேலும், பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட சுமார் 140 பயணிகளை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.