ஜல்கான் ரயில் விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!
உத்தர பிரதேசத்தில் மாநிலம் லக்னோவில் இருந்து புஷ்பக் விரைவு ரயில் நேற்று (ஜன.22) மாலை மும்பை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்த ரயில், மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் பத்னேரா ரயில் நிலைய சந்திப்பு அருகே சென்றபோது ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது.
இதனால் அச்சமடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனையடுத்து உடனடியாக ரயில் நின்றது. அப்போது பயணிகள் சிலர் தண்டவாளத்தில் இறங்கி ஓடினர்.
அவர்கள் தண்டவாளத்தை கடந்தபோது மறுபுறம் வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் கண்ணிமைக்கும் நேரத்தில் பயணிகள் மீது மோதியது. இந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "காயம் அடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க தயாராக இருக்குமாறு அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 1.5 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 5,000 ரூபாயும் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.