For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோயிலுக்கு சென்ற வழியில் சோகம்... நெல்லையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 6 வயது சிறுவன் உயிரிழப்பு!

நெல்லையில் அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த 6 வயது சிறுவன் உயிரிழப்பு...
07:32 PM Apr 07, 2025 IST | Web Editor
கோயிலுக்கு சென்ற வழியில் சோகம்    நெல்லையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 6 வயது சிறுவன் உயிரிழப்பு
கோப்புப் படம்
Advertisement

திருநெல்வேலி அருகே சீதபற்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்து. இவரது மனைவி ரஞ்சிதா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கிராமத்தில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ரஞ்சிதா தனது 6 வயது இளைய மகன் மாதேஷை அழைத்துக் கொண்டு விநாயகர் கோயிலுக்கு புறப்பட்டு சென்றார்.

Advertisement

அப்போது கோயிலுக்கு செல்லும் வழியில் ஒத்தையடி பாதை புல்வெளியில் மின் கம்பி அறுந்து கிடந்தது. அந்த வழியாக கோயிலுக்கு சென்ற யாரும் இதை கவனிக்கவில்லை. சிறுவன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான்.

நேற்று சீதபற்பநல்லூர் பகுதியில் மழையுடன் பலத்த காற்று வீசியதாக கூறப்படுகிறது. இதில் பராமரிப்பு இல்லாத பழைய மின் வயர் அறுந்து இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள வயலுக்கு மின்சாரம் செல்லும் மின்வயர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டு போடப்பட்டுள்ளதால் மின் வயர் அறுந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்பட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

தகவல் அறிந்ததும் இறந்த சிறுவனின் உடலை போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement