ரிசர்வ் வங்கி நகைக் கடன் விதிகள் தளர்வு - ஒவ்வொன்றாக விளக்கிய சு. வெங்கடேசன் எம்.பி!
ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய நகைக்கடன் விதிகளை அறிவித்தது. இதில் ஏழை மக்கள் பாதிக்கும் வகைகள் சில விதிகள் இருந்ததாக பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து ரிசர்வ் வங்கி அதற்கான பரிந்துரைகளை ஏற்றுகொண்டு, தற்போது விதிமுறை தளர்வுகளை அறிவித்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வீடியோ வெளியிட்டு ஒவ்வொன்றாக விளக்கியுள்ளார். அதில், “இந்திய ரிசர்வ் வங்கி நகைக்கடன் பெறுவது தொடர்பான புதிய விதிமுறைகளை இன்று(ஜூன்.07) வெளியிட்டுள்ளது. இது மிகப்பெரிய மகிழ்ச்சியளிக்கும் செய்தி. ஏனென்றால் இது சார்ந்த எங்களது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய விதிமுறைகளாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக நகைக்கடன் பெறுபவர்கள் அந்த நகைக்கடன் ரசீது ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு, எனது நகை தான் என உறுதிமொழி கொடுத்தால் போதும் என்பது மிகப்பெரிய வெற்றி ஆகும்.
இரண்டாவது கடனை திருப்பி செலுத்துவதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு, அதற்கான வருமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டது 2வது வெற்றி. மூன்றாவதாக ஏற்கெனவே கடன் பெற்றவர்கள் அந்த மொத்த தொகையையும் செலுத்திய பிறகு தான், திருப்பி அந்த கடனை நீட்டிக்க முடியும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு, அதற்கான வட்டி பாக்கி செலுத்தினால் போதும் என்று அறிக்கப்பட்டுள்ளது.
நான்காவது ஏற்கெனவே 5 லட்சம் ரூபாய்க்கு கடன் பெற்றிருந்தால், அந்த கடனை திருப்பி செலுத்தும்போது, அந்த நகையின் மதிப்பு ரூ. 6 லட்சமாக இருக்கும் பட்சத்தில், கூடுதல் கடன் பெறுவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஐந்தாவதாக வங்கி வெளியிடுகிற தங்க நாணயத்துக்கு மட்டுதான் கடன் என்ற நிபந்தனை நீக்கப்பட்டு, தங்க நாணயம் முறையாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அதற்கும் கடன் கொடுக்கப்படும்.
அதே போல் கடனை திருப்பி செலுத்திவிட்டால், ஏழு நாளுக்குள் நகையை திருப்பி செலுத்தினால் போதும் என்பது நீக்கப்பட்டு, அன்றைக்கே நகையை திருப்பி செலுத்த வேண்டும். அப்படி திருப்பி செலுத்த தவறினால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 அபராதம் என்பதும் அது மட்டுமில்லாது அந்த கடந்தாரர் நீதிமன்றத்தை நாடினால் அவருக்கான உரிமை நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
தங்க நகைக்கடன் தொடர்பாக
தான் வெளியிட்ட விதிமுறைகளில் நாம் கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வு வங்கி அறிவித்துள்ளது.இது இந்திய ரிசர்வு வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று.
இந்த மாபெரும் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இனி… pic.twitter.com/NEduKpyL0Q
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 7, 2025
இவை அனைத்தையும் விட இதுவரை கடன் பத்திரங்கள் ஆங்கிலத்தில் இருந்தது. அது கடன் பெறுபவர்களின் தாய்மொழியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இனி தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றால், அதற்கான படிவம் தமிழில்தான் இருக்கும் என்பது இந்த புதிய விதிமுறைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துளார்.