மியான்மரில் தொடரும் சோகம்... நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ம் தேதி அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்தது.
மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த பலரின் உடல்கள் மீட்கப்பட்டன. மியான்மரின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 3,408 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, மியான்மரில் நேற்று முன்தினம் (மார்ச் 29) 5.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, 3வது நாளாக நேற்று 5.1 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் பீதியில் உறைந்தனர்.