For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது!” தன் மீதான பாலியல் புகார் குறித்து மலையாள நடிகர் நிவின் பாலி விளக்கம்!

09:29 PM Sep 03, 2024 IST | Web Editor
“முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ” தன் மீதான பாலியல் புகார் குறித்து மலையாள நடிகர் நிவின் பாலி விளக்கம்
Advertisement

மலையாள நடிகர் நிவின் பாலி தன் மீதான பாலியல் புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர். இந்த சூழலில் அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அந்தப் பெண் அணுகியநிலையில், இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தன் மீதான பாலியல் புகார் குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக நிவின் பாலி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு தவறான செய்தி வெளியாகி உள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் உறுதியாக இருக்கிறேன், மேலும் இதற்கு பொறுப்பானவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். உங்கள் அக்கறைக்கு நன்றி. மீதமுள்ளவை சட்டப்படி கையாளப்படும். இவ்வாறு அதில் நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement