இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு - விதிமுறைகள் என்னென்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது.
இந்த நிலையில் குரூப்-1 பிரிவில் 70 காலி பணியிடங்களுக்கும், குரூப்-1ஏ பிரிவில் 2 இடங்களுக்கும் இன்று தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 44 மையங்களில் நாளை நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வை 2.49 லட்சம் பேர் எழுதவுள்ளனர். அவர்களில் குரூப் 1 தேர்வை 2.27 லட்சம் பேரும், குரூப் 1ஏ தேர்வை 6,465 பேரும் எழுதுகின்றனர். சென்னை மையத்தில் மட்டும் தேர்வெழுத 41 ஆயிரத்து 94 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வர்கள் இன்று காலை 8.30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு அனுமதி சீட்டுடன் வர வேண்டும் என்றும், 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுடன் வர வேண்டும். அவ்வாறு வரத் தவறினால், அவர்கள் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல், ஆதார் அட்டை, பாஸ்போர்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டுவர வேண்டும். தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம், புளூடூத் போன்ற மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.