தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (03-11-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மார் - பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். நேற்று முன்தினம் வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி,நேற்று (03-11-2025) காலை 05.30 மணி அளவில் வலுவிழந்தது.
இதன் காரணமாக வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. தென்தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவியது. தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (புதன்கிழமை) வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.