For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“திருநெல்வேலி அல்வா ஃபேமஸ் இல்லை... மத்திய அரசு கொடுக்கும் அல்வாதான் ஃபேமஸ்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“நெல்லை அல்வா உலகிற்கே பேமஸ் என்றால், தற்போது மத்திய அரசு மாநில அரசுக்கு தரும் அல்வா தான் மிகவும் பேமஸ்” என மத்திய அரசு நிதி தராதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
11:53 AM Feb 07, 2025 IST | Web Editor
“நெல்லை அல்வா உலகிற்கே பேமஸ் என்றால், தற்போது மத்திய அரசு மாநில அரசுக்கு தரும் அல்வா தான் மிகவும் பேமஸ்” என மத்திய அரசு நிதி தராதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
“திருநெல்வேலி அல்வா ஃபேமஸ் இல்லை    மத்திய அரசு கொடுக்கும் அல்வாதான் ஃபேமஸ்”   முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

தமிழ்நாடு முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரு நாள் பயணமாக நேற்று (பிப். 6) நெல்லை சென்றார்.  கங்கைகொண்டான், சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார்.

Advertisement

தொடர்ந்து இன்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தில் முடிவடைந்த ரூ.1679.75 கோடி பணிகளை திறந்து வைத்தார். மேலும் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,

“எந்த ஆட்சியாக இருந்தாலும் முக்கிய நகரமாக இருந்த ஊர் திருநெல்வேலி. ஓராண்டு, ஈராண்டு அல்ல.. 17 ஆண்டுகள் வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் பூலித்தேவன். நெல்லையப்பர் கோயிலில் பூட்டிக் கிடந்த மேற்கு, தெற்கு வாசல்கள் திமுக ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. வரும் நவம்பர் மாதத்திற்குள் நெல்லையப்பர் கோயிலில் வெள்ளித்தேர் ஓடும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக இரு சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். அதேபோல் பாளையங்கோட்டையில் Y வடிவிலான ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். பாபநாசம் கோயில் வளாகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அதேபோல் மேலப்பாளையம் பகுதியில் அம்பாசமுத்திரம் சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும். இந்த திட்டங்களுக்கு விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

2023ஆம் ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையால் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் எவ்வளவு பாதிப்புகளை சந்தித்தது என்று அனைவருக்கும் தெரியும். அந்த பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசிடம் நிதி கேட்டோம். ஆனால் மத்திய அரசு இடைக்கால நிதியை கூட கொடுக்கவில்லை. நாம் கேட்ட ரூ.37 ஆயிரம் கோடி நிதியில் ஒரு சதவிகிதம் கூட கொடுக்கவில்லை.

தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள். இந்திய வரைப்படத்தில் தமிழ்நாடு இருந்தால் போதுமா? மத்திய பட்ஜெட்டில் இருக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க வந்தால் மட்டும் போதும் நினைக்கிறார்களா? இதுவரை திருநெல்வேலி அல்வா தான் உலகம் முழுவதும் ஃபேமஸ். ஆனால் இப்போது மத்திய அரசு கொடுக்கும் அல்வா தான் ஃபேமஸாக உள்ளது.

மகளிருக்கான திட்டங்களை பார்த்து பார்த்து இந்த அரசு செய்து வருகிறது. நவீன தொழில் மையமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. பெண்களுக்கு அதிகளவிலான வேலை வாய்ப்பு வழங்கி, புதிய வரலாற்றை திமுக உருவாக்கி வருகிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று இருமாப்போடு பேசக்கூடியவன் ஸ்டாலின் அல்ல. நேற்று சிப்காட்டில் தொழில்களை தொடங்கி வைத்த போது, அங்கே பணியாற்றும் என் ஊழியர்கள் என்னை அப்பா என்று அழைத்து, “இந்த தொழில் தொடங்கி வேலைவாய்ப்பு தருவதற்கு நன்றி” என்று கூறிய போது நான் நெகிழ்ந்து போனேன்.

தமிழ்நாட்டிற்கு பக்கபலமாக திமுக ஆட்சி இருக்கும். திமுகவிற்கு பக்கபலமாக தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் இருப்பார்கள். சொல்லி இருக்கிற திட்டங்களும், செய்து இருக்கிற திட்டங்களையும் கொண்டு தமிழ்நாட்டில் எப்போதும் நாம் ஆட்சியில் இருப்போம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென்மாவட்ட வளர்ச்சி புலி பாய்ச்சலில் இருக்க வேண்டும். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் இந்த வளர்ச்சியை பெரும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags :
Advertisement