For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்செந்தூர் மாசித் திருவிழா - விமரிசையாக நடைபெற்ற குடவருவாய் தீபாராதனை நிகழ்வு!

07:54 AM Feb 19, 2024 IST | Web Editor
திருச்செந்தூர் மாசித் திருவிழா   விமரிசையாக நடைபெற்ற குடவருவாய் தீபாராதனை நிகழ்வு
Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 5-ம் திருநாளான நேற்று குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்று மாசித் திருவிழா. இந்த மாசித் திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறக்கூடிய இத்திருவிழாவில் நாள்தோறும் முருகரும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று  பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அந்த வகையில் இந்தாண்டும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

4-ம் திருநாளான நேற்று முன்தினம் (பிப். 17) மேலக்கோயிலில் இருந்து முருகர் குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி எட்டு திருவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருட்பாலித்தனர்.

தொடர்ந்து நேற்று (பிப். 18) 5-ம் திருநாளான குடவருவாயில் தீப ஆராதனை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மேலக் கோயிலான ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோயில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. அங்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினர்.

பின்னர் பிரதான வாயில் திறக்கப்பட்டு, குடவருவாயில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கீழ ரதவீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோலாகலமாக நடைபெற்ற இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 23-ம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

Tags :
Advertisement