உச்சநீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
உச்சநீதிமன்றத் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா, நீதிபதிகளாக இருந்த அபய் எஸ்.ஓகா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் ஓய்வுபெற்றால் மூன்று நீதிபதிகள் பணியிடங்கள் காலியாகின.
இந்த பணியிடங்களுக்காக கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.அஞ்சாரியா, குவாஹாட்டி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த விஜய் பிஷ்னோய், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.எஸ்.சந்தூர்கர் ஆகியோரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து, மூன்று நீதிபதிகளும் நேற்று பதவியேற்றனர். உச்சநீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மூன்று நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை, தன் முழு பலமான 34ஐ எட்டியுள்ளது.