“ஜம்மு காஷ்மீரில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த விளைவு உருவாகியிருக்கிறது” - திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு!
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த சிலர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலையடுத்து ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் மாதிரி வரைபடங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளகளை சந்தித்து அவர் பேசியதாவது, “தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பயங்கராவாதத்தை கடுமையாக நசுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரக்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாஜக அரசின் தவறான கொள்கை மற்றும் ஜம்மு காஷ்மீரில் அவர்கள்(பாஜக) எடுத்த நடவடிக்கை இந்த விளைவுகளை உருவாக்கி இருக்கிறது. உளவுத்துறை தோல்வியடைந்திருப்பதை இந்த சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது.
ஆர்டிகள் 370-ஐ அகற்றிவிட்டால் அங்கே பயங்கரவாதம் இருக்காது என தொடர்ந்து பாஜக சொல்லி வந்தது. பயங்கரவாதத்தை நீக்கிவிட்டோம் என்று சொன்னதன் அடிப்படையில், அதை நம்பி போன சுற்றுலா பயணிகள் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே இதற்கு அமித் ஷா பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது”
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.