”பாமகவில் திலகபாமா பொருளாளராக தொடருவார்” - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு சமீப காலமாக வெளிப்படையாக பொதுவெளியில் அரங்கேறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராமதாஸ் அண்மையில் அளித்த பேட்டியில், வளர்த்த கடா என் மார்பில் பாய்ந்துவிட்டது, தாய் மீது பாட்டில் வீச்சு, பாஜக உடனான கூட்டணி வற்புறுத்தல், என கடுமையாக அண்மையில் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸை சாடினார்.
இதையடுத்து ராமதாஸின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கு பிறகு, அன்புமணி ராமதாஸ் தனது தலைமையில் சென்னை பனையூரில் பாமக நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்தை இன்று(மே.30) நடத்தினார். இதில் பாமக பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கினார்.
இந்த நிலையில் பாமகவில் திலகபாமா பொருளாளராக தொடருவார் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.